இறை நெறியை வாழ்வு நெறியாக்குவோம்

வல்ல அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து அதிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவையும் அளித்து வருகிறான். படைத்து பரிபாலித்து அழிக்க வல்ல அல்லாஹ் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் வரையறைத்திருக்கிறான். அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராகிய நபி மூஸா (அலை) அவர்களிடம் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன் அல்லாஹ்வைப்பற்றி கேட்ட கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அளித்த பதில் இதைத்தான் பறைச்சாற்றுகிறது.

மூஸாவே! உங்களிருவன் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.
''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20: 49,50)

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இவ்வுலகத்திற்கு அல்லாஹ் அனுப்பிய போது தான் காட்டும் வழியை பின்பற்றித்தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற கட்டளையுடன் தான் அனுப்பியிருக்கிறான்.

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:38)

இவ்வாறு நபிமார்கள் மூலமாக தன்னுடைய நேர்வழியை மனிதர்களுக்கு தெளிவுபடுத்தும் வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழி காட்டுவதற்காக இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களை அனுப்பினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

நமக்கு நேர்வழியை திருமறை குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு நேர்வழி தெளிவாகிய பிறகு முஸ்லிம்கள் குர்ஆனின் பக்கமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் பக்கமும் அழைக்கப்பட்டால் அவர்கள் அதை உடனே செயல்படுத்தக் கூடிய மக்களாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களே வெற்றியாளர்கள் என திருமறையில் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)

அவ்வாறு இல்லாமல் தம்முடைய வாழ்க்கையில் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு மாற்றமாக செயல்பட எந்த ஒரு இறை நம்பிக்கையாளருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனிலே தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

இவ்வளவு தெளிவான போதனைகளையும் மீறி நாம் மனம்போன போக்கிலே வாழ்ந்து அல்லாஹ்வும் அவனுடைய து}தர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியை புறக்கணித்தோம் என்று சொன்னால் மறுமையிலே கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) ''எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா?
(அல்குர்ஆன் 14:44)

எனவே நம்முடைய வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் காட்டித்தந்த முறைப்படி அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற பேராவலுடன் இந்த நூலகம் துவக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்திலே குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மார்க்க அறிஞர்களால் ஆற்றப்பட்ட ஆடியோ வீடியோ கேசட்டுகள் மற்றும் நூற்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இவற்றை வாங்கி கேட்டு படித்து பயன்பெற்று நம்முடைய வாழ்க்கைகளை அதன்படி அமைத்துக் கொண்டு மறுமையிலே வெற்றியாளர்களாக இருக்க முயற்சிப்போம். இவ்வாறு நாம் மார்க்கத்தை அறிந்து கொள்வதிலிருந்தும் வல்ல அல்லாஹ் நமக்கு நன்மையை நாட விரும்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி எண் 71)

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த முறைப்படி வாழ்ந்து மறுமையில் சொர்கத்திற்குரிய மக்களாக இருக்க அருள்புரிவானாக.