முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.


இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை
1. மீன் சாப்பிடக் கூடாது
முஸ்லிம்களின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதம் வந்து விட்டால் பிறை 1 முதல் 10 வரை மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறி விடுவார்கள்.
2. தாம்பத்யத்திற்குத் தடை
முஹர்ரம் பத்து வரை தம்பதிகளைத் தாம்பத்தியத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதை நடைமுறையில் செய்து வருகின்றனர்.
3. சீரழிவுக்கு வழி வகுத்தல்
ஒரு இளைஞன், ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்து கண் ஜாடை செய்யவும், கை ஜாடை செய்யவும், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் சந்தித்துப் பேசிக் கொள்ளவும் ஏதுவாக ஏழாம் பஞ்சா, பத்தாம் பஞ்சா என்ற பஞ்சாக்களை ஏற்படுத்தி, இள வயதினரின் மனதைப் பஞ்சாகப் பறக்க விடுகின்றனர்.
4. தீ குளித்தல்
முஹர்ரம் மாதத்தில் எடுக்கப்படும் ஏழாம் பஞ்சா மற்றும் பத்தாம் பஞ்சாவின் போது ஆண்களைக் குதிரையின் மேல் ஏற்றி ஊர்வலம் சுற்றுவதும், பெண்களைத் தீக்குளிக்கச் செய்வதும் வழமையாக வைத்துள்ளனர்.
5. உப்பு, மிளகு, மோர், கொழுக்கட்டை
பஞ்சா ஊர்வலமாக வரும் போது சாம்பிராணி புகை போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் உப்பு ஒரு பார்சலும், மிளகு ஒரு பார்சலும் கொடுப்பார்கள். நமக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை இந்த உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கை. மேலும் ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் கொழுக்கட்டை செய்து பஞ்சா ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப் படுவதற்கு முன்பு தண்ணீர் கேட்டார்களாம். அப்போது நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார்களாம். எனவே அந்நாளில் யாரும் தாகத்துடன் இருக்கக் கூடாதாம். எனவே அந்நாளில் புதிய மண் பானை வாங்கி அதில் மோர் அடைத்து மதிய நேரத்தில் விநியோகிப்பார்கள். அதே நாளில் நோன்பு நோற்கவும் சொல்லிக் கொள்வார்கள்.
6. மிருக வதை
பஞ்சா ஊர்வலத்தின் போது வாயில்லா ஜீவனாகிய குதிரையின் மீது இரண்டு நபர்களை ஏற்றி வைத்துக் கொண்டு தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள். குதிரைக்காரன் அதற்குரிய கூலியை வாங்கிக் கொள்ள, இவர்கள் குதிரையைக் கொடுமைப் படுத்துவார்கள்.
7. சித்ரவதை
மாற்று மதத்தினர் செய்வதைப் போன்று, இந்த முஹர்ரம் பத்தின் போது தங்கள் உடல்களைக் காயப்படுத்தி, சிதைக்கின்றனர். தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கின்றனர்.


இது போன்ற பல்வேறு காரியங்கள் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வருகின்றன.


ஆனால் உண்மையில் இந்த முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? இஸ்லாம் நமக்கு என்ன கட்டளையிடுகின்றது? என்பதைப் பார்ப்போம்.


முஹர்ரம் மாதத்தில் செய்ய வேண்டிது என்ன?
முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்க வேண்டும். இந்த நோன்பைக் கூட ஹஸன், ஹுசைன் நோன்பு என்று மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். ஆனால் இந்த நோன்பு எதற்காக என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.


நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ''இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். ''இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3397


அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916, 1917


இந்த ஹதீஸ்களின் படி முஹர்ரம் மாதத்தில் 9, 10 நோன்பு நோற்க வேண்டுமே தவிர, பஞ்சா போன்ற சப்பரங்களை எடுப்பதும், மீன் சாப்பிடக் கூடாது, தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிப்பதும் மார்க்கத்தில் செய்யப்படும் வரம்பு மீறுதல் ஆகும்.


இந்தக் காரியங்கள் அனைத்தும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயல் என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 2697


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 3243


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை யாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ 1560


மேலும் அல்லாஹ் சொல்லாததை சொல்வது அவனுக்கே பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போன்றதாகும்.


உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக் கிறீர்களா? (அல்குர்ஆன் 49:16)


எனவே அல்லாஹ்வின் வார்த்தைக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும். குர்ஆன், ஹதீஸின் இல்லாததை நாம் மார்க்கமாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் அதை அல்லாஹ் ஏற்க மாட்டான்.


இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிட மிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன் 3:85)


எனவே இதன் அடிப்படையில் வாழ்ந்து ஈருலகிலும் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக!