இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்." (4:59)

நீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றவேண்டும். இதனால் மற்றவரின் வார்த்தையை நீங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதன் கருத்து, கண்களை மூடிக்கொண்டு நீங்கள் எவருக்குப் பின்னாலும் நடக்கக்கூடாது.

ஒருவர் உங்களிடம் ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அவர் இறைவனுடைய, இறைத்தூதருடைய கட்டளைக்குத் தக்கபடிச் சொல்கிறாரா அல்லது முரணாகச் சொல்கிறாரா என்று நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தக்கபடி சொன்னால், அவர் சொல்வதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில், இந்தக் கட்டத்தில் நீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் தான் பின்பற்றுகிறீர்கள்; அந்த மனிதரை நீங்கள் எங்கே பின்பற்றுகிறீர்கள்? இறைக்கட்டளைக்கு, இறைத்தூதரின் கருத்துக்கு முரனாக அவர் சொன்னால், அவர் யாராக இருந்தாலும், அவர் வார்த்தையை அவர் முகத்திலேயே அடித்து விடுங்கள்! ஏனெனில் இறைவனையும், இறைத்தூதரையும் தவிர வேறு எவருடைய கட்டளையையும் நீங்கள் பின்பற்ற உங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இதை நீங்கள் உணர முடியும்; உங்களுக்கு எதிரில் இறைவனே நேரில் வந்து கட்டளையிடுவதில்லை. தான் இடவேண்டிய கட்டளைகள் அனைத்தையும் தனது திருத்தூதர் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் பிறப்பித்த கட்டளைகள் அனைத்தும் குர்ஆனிலும், ஹதீஸ் எனப்படும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலும் இருக்கின்றன. என்றாலும், திருக்குர்ஆனும், ஹதீஸும் உங்களுக்கு எதிரில் வந்து ஒரு செயலைச் செய்யச் சொல்வதற்கோ, ஒரு செயலைத் தடுப்பதற்கோ அவை தாமாகவே நடந்து திரிந்து, பேசிக் கட்டளையிடுபவை அல்ல!

திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் கட்டளைப்படி உங்களை நடக்க வைப்பவர்கள் எந்தவிதத்திலும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள். எனவே மனிதர்களைப் பின்பற்றாமல் இருப்பதற்கு வழியில்லை என்றாலும் இங்கு முக்கியமான பணி ஒன்று இருக்கிறது; நீங்கள் மற்ற மனிதர்களுக்குப் பின்னால் கண்களை மூடிக்கொண்டு நடக்கக்கூடாது.

இப்போது உங்களுக்கு நான் சொன்னபடி ஒருவர் உங்களை திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகிய வற்றுக்குத் தக்கபடி நடக்க வைக்கிறாரா, இல்லையா என்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! திருக்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் தக்கபடி நடக்க வைத்தால், அவரை பின்பற்றுவது உங்களுக்கு கடமையாகும். முரண்பட்ட விதத்தில் நடக்க வைத்தால் அவரைப் பின்பற்றுவது உங்களுக்கு (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.