ஐயமும் தெளிவும்: இறந்தவர்களுக்காக நாம் செய்ய வேண்டியவை என்ன?

இஸ்லாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். இதை ஏற்று வாழும் ஒவ்வொரு மனிதரும் தாம் செய்கின்ற செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும்.


அவ்வாறு செய்யும் செயல்கள் மறுமையில் அல்லாஹ்வால் கூலி கொடுக்கப்பட வேண்டுமானால் அவன் அங்கீகரித்தவைகளாக இருக்க வேண்டும். அவன் காட்டித் தராத செயல்களை செய்தால் மறுமையில் அவனிடம் கூலியை நாம் பெற முடியாது.


இதனடிப்படையில் இறந்து விட்ட நம் உறவினர்களுக்கு நன்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தில் நடைமுறையில் பலவிதமான காரியங்களை நாம் செய்கிறோம்.


இவ்வாறு நாம் செய்யும் செயல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸிற்க்கு உட்பட்டதா? அல்லது மறுக்கப் பட்டதா? என்பதைக் காண்போம்.


செய்ய கூடாதவை!
இறந்தவர்களுக்கு நாம் செய்யக் கூடாதவைகளில் முக்கியமானவை


இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்த்தல்

1, 7, 40 ஃபாத்திஹா மற்றும் வருட பாத்திஹாக்கள் ஓதுதல்



ஒருவர் இறந்து போய் விட்டால் அவரின் உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. எனவே மற்றவர்கள் செய்யும் எந்த அமலும் அவரைப் போய் சேராது.


''ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (அல்குர்ஆன் 53:38-40)


இந்த வசனத்திற்கு இமாம் ஷாஃபி அவர்கள் அழகிய மிக சரியான விளக்கத்தை தருகிறார்கள். இமாம் ஷாஃபியை பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் இதை கவனிக்கட்டும்.


''ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53:39) இந்தத் திருவசனத்திலிருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: ''குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக் காட்டுதலின் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப் படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் 53:39 வசனத்தின் விரிவுரை)


மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸþம் ஆகியோர் இறந்த போதும் அவர்களின் அன்பு மனைவியான கதீஜா (ரலி) உட்பட பல மனைவிமார்கள் இறந்த போதும் அவர்களின் அன்புத் தோழர்கள் இறந்த போதும் யாருக்கும் நபி (ஸல்) அவர்கள் பாத்திஹா ஓதியதில்லை. மேலும் குர்ஆன் ஓதி அதன் நன்மைகளை அவர்களுக்கு சேர்த்தும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் காட்டித் தரப்படாத இந்தப் புதுமையான நடைமுறையைச் செயல் படுத்துபவர்கள் பின்வரும் நபி மொழியின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும்!


எவரேனும் நமது அனுமதி இல்லாமல் (எந்த ஒரு) அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸலிம் 3541


இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதி சேர்த்தல், பாத்திஹா ஓதுதல் ஆகியவை மார்க்கத்தில் இல்லை. இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டியவை என்று சிலவற்றை குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன. அவை என்ன? என்பதைப் பார்ப்போம்.


செய்ய வேண்டியவை


1. இறந்தவருக்காகப் பிரார்த்தனை மற்றும் பாவமன்னிப்பு தேடுதல்
அவர்களுக்குப் பின் வந்தோர் ''எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 59:10)


ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனை விட்டுத் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை:
1. நிரந்தர தர்மம்
2. பயன்தரும் கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3358


2. தர்மம் செய்தல்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''எனது தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும் படி சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கின்றேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 1388


3. இஸ்லாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிறைவேற்றலாம்
ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். நான் என்ன செய்யலாம்?'' என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டார்கள். அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 2761


4. மரணித்தவருக்கு ஹஜ் கடமையாகியிருந்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார். அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள், ''உனது தாய்க்குக் கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் 'ஆம்' என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''அப்படியாயின் அல்லாஹ்விற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 1852


5. நோன்பு கடமையாகி அதை நிறைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

''நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோற்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 1952


6. இறந்தவர் கடனாளியாக இருந்து, அவர் எந்தச் சொத்தும் இல்லாத ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார். அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள், ''உனது தாய்க்குக் கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் 'ஆம்' என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''அப்படியாயின் அல்லாஹ்விற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 1852


நாம் மேலே சொன்ன இவ்விஷயங்களைத் தவிர இறந்தவருக்குச் செய்ய வேண்டிய வேறு எந்த விஷயமும் இல்லை. இதைத் தவிர இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும்.